ஜாரியா ஓர் அகத்தேடல்
பு.மா.சரவணன்

by olaichuvadi

தேடல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது என்றாலும் மனித இனம் மட்டுமே புறத்தேடலோடு நில்லாமல் அகத்தேடலிலும் ஈடுபடுகின்றது. ஒவ்வொருவருக்கான தரிசனங்கள் வேறுபட்டிருப்பினும் விடுதலை என்ற அகவய, புறவயப் புரிதலோடு மனிதனின் சிந்தனை விரிவடைகின்றது. சமூக ஏற்ற தாழ்வுகள், குழப்பங்கள், அசௌகரியங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், வேதனைகள் என மாறி மாறிப் பயணிக்கும் ஒரு மனிதனின் ஆன்மா விழைவது, நிறைவான இன்பத்தை நோக்கியதாகவே அமைகின்றது. தான் கண்டுணர்ந்த மலர்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொருவரின் சொல்லாடல்களும், சமிக்ஞைகளும், வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. ஒரு மனித மனத்தை உன்னத நிலைக்கு மடை மாற்றம் செய்யும் எந்தவொரு செயலும், அது எந்த வடிவத்தில் இருந்தாலும் வரவேற்கத்தக்கதே. அப்படியானதொரு பேரனுபவம் எனக்குள் நிகழ்ந்தது.

எதேச்சையான இணையத் தேடலில், கோக் ஸ்டுடியோவின் mtv season 3 பார்க்க நேர்ந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை என்கிற காரணம் மட்டுமல்லாமல் நேபாள பெண் துறவி அனி சோயிங் (Ani Choying) மற்றும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஃபாரா சிராஜின் (Farah Siraj) கூட்டிணைவும் என்னை ஈர்த்தது. ஆரம்பத்தில் இந்தப் பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ள முடியாதபடியாக அதன் இசை வடிவமும், சந்த லயமும், நம்மில் ஒரு புத்துணர்ச்சியையும், புது அனுபவத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

ஆதியில் சலனமற்ற, சப்தமற்ற காரிருள் இருந்தது. பெருவெடிப்பில் நிகழும் சலனமென மென்மையான மணி ஓசையுடன், ஓங்காரச் சப்தத் தொனியுடன் இயக்கம் தொடங்குகிறது. (அனி சோயிங்கின் மந்திர உள்ளடக்கம்) பின் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளாக இசைக்கத் தொடங்கி, பல்வேறு குரல்களின் மென்மையான பாடல் வரிகளில் தொடங்குகிறது இசை. பூமி உருவானதையும், அதில் உயிர்களின் தோற்றமும், பரிணாம வளர்ச்சியுமாக நம் உணர்வை இசையுடன் இணைத்துப் பார்க்கும் விசாலமான அனுபவமாக முகிழ்கிறது இசை வடிவம்.

ஃபாரா சிராஜின் அட்டகாசமான ஜோர்டான் நாட்டின் நாட்டுப்புறப் பாடல் வடிவமாக (அவரின் கூற்றுப்படி) நம்மை ஆட்கொள்ளுகிறது அரபி சந்தத்துடன் கூடிய அவரின் குரல். பரிணாமத்தில் படிப்படியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்ட மனித இனம், கடந்த பத்தாண்டுகளில் வேகம் வேகமென மகிழ்ச்சி, துக்கம், வேதனை, சிரிப்பு, சிலிர்ப்பு, கொடூரம், உறவுச் சிக்கல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடான சத்தமென அலைக்கழிக்கப்படுகிறது, இருந்தாலும் ஆதி உயிரியின் கூறு நம் முன் சமைக்கப்பட்டுள்ளதால், ஆதி அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, பரவசம் என்பவற்றை ஏங்கும் முகமாகவே நம் அகத்தோட்டம் உள்ளது. இவ்வாறான அகத்தேடலை ரகுமான் இசைக்கோர்ப்பில் கொடுத்திருப்பார். மெல்ல மெல்லத் தாளகதியுடன் கிளம்பும் இசை, பாடகர்களின் குரல், சடுதியில் திடுமென வேகமெடுக்கத் தொடங்கியதும் நம்மை அறியாமலேயே தாளகதியுடன் ஒன்றிவிடுகிறோம்.

மேலும் மேலும் என வேகம் கூட்டிச் செல்லும் சிவமணியின் ட்ரம்ஸ், கிடார், ரகுமானின் கீபோர்டு வாசிப்பு, பாடகர்களின் உச்ச ஸ்தாதியுடன் கூடிய வேகம் நம்மை இழக்கச் செய்து பிரபஞ்ச இயக்கத்தின் தாளகதியுடன் ஒன்றி விடுகிறோம். ஃபாரா சிராஜின் குரல் வளமும், மலர்ச்சியும், தோற்றமும் நம் புறவய உணர்ச்சிகளின் தொகுப்பாக மாறி விடுகிறது. ஆனால் மென்மையான, சலனமில்லா மந்திர உச்சாடனத்துடன் கூடிய பேரமைதி கொண்ட தோற்றம் என அனிசோயிங்கின் இருக்கை, மனித மனங்களின் உணர்ச்சிக் குவியல்கள், ஆசைகள், வெறித்தனங்களுக்கு உட்பட்டும், இந்த பூமி தன் இயல்பிலேயே பேரமைதியுடன், சலனமில்லாமல் தன் சுற்றுப்பாதையில் அலாதியான சப்த லயத்துடன் தன் இருக்கையில் இருந்தபடியே சுழல்கிறது என்பதாக உணர வைத்து விடுகிறது.

பலத்த பேரோசைக்குப் பின் அனிசோயிங்கின் அமைதியான ஓங்காரத்துடன் லயங்கொள்ளும் பாடல் முடிவும், இந்த இசைக்கோர்ப்பினை நிகழ்த்தும் ஏ.ஆர்.ரகுமானின் மென்மையான அசைவுகளுடனும் கூடிய இசை மற்றும் அவரது முகத்திலும் அனிசோயிங்கின் முகத்திலும் காணும் அதே பேரமைதியுடன் கூடிய இயக்கம், அகத்தேடலில் கண்டடையும் பேரானந்த ஆன்மானுபவம், புறவயவுலகியலில் எவ்வகையான உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியிலும் அடைய முடியும் என்பதை உணர்த்துவதாகவுள்ளது.

நம்முள் அளப்பரிய கிளர்ச்சியையும், பேரானந்த அனுபவத்தையும் கொடுக்கும் இசைவடிவை ஏ.ஆர்.ரகுமான் படைத்துள்ளார். படைப்பின் ஊடகமாகவே அவர் மாறியுள்ளார். இவ்வாறான அனுபவத்தை எமக்குத் தந்த இந்தப் பாடல், தாய்மையின் அர்ப்பணிப்பாக, உலகிலுள்ள எல்லா அம்மாக்களுக்காகவும் சமர்ப்பணம் செய்வதாகக் கூறுகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஜாரியா பாடலை எழுதியவர் பிரஸ்கன் ஜோஷி.

இறைவன், கருவைச் சுமக்கும் தாய் மூலமாகவே படைப்பினை நிகழ்த்துகிறார். எனவே அம்மாதான் படைப்பின் ஊடகமாக இருக்கின்றார் என்கிறார் ரகுமான். ஜாரியா என்பதன் பொருளும் அதுவே. ஊடகமாக, வழியாக (Medium, Path) என்று பொருள்படும். இந்த ஜாரியா பாடல் தாய்மையினைப் போற்றுவதன் காரணமாகவே தான் இணைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் துறவி அனிசோயிங். இந்தப் பாடலில் ஜோர்டானின் நாட்டுப்புறப் பாடலின் இணைப்பைச் சேர்த்து மெருகூட்டியுள்ளதாகக் கூறுகிறார் ஃபாரா சிராஜ். இதில் ரீடாஹா என்பது “எனக்கு அம்மா வேண்டும்” கெஃபிமா ரீடாஹா என்பது “எந்த வழி ஆயினும் நான் அவளுடன் இருக்கவே விழைகிறேன்” என்பதாகப் பொருள் தரும் எனக் கூறுகிறார் ஃபாரா சிராஜ்.

ஃபாரா சிராஜ் கையாளும் இசை வடிவத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமக்கு அரபிய இசை குறித்தான வரலாற்றுப் பார்வையும் அவசியமாகிறது. அரபிய இசை 2010 முதல் தனித்துவமாகவும், பரந்த வீச்சுடையதாகவும் இருந்தாலும், அதன் தொன்மை அரபிய தீபகற்பங்களின் கூட்டிசையாக உருவெடுத்துள்ளது. எனினும் ஐரோப்பிய அறிஞர்களால், அரபி இசை ஈரான் நாட்டில் இருந்து பிறந்தத்தாகவே அனுமானிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் இருந்து எகிப்து அரேபிய இசை வடிவத்தை தன்னுள் சுவீகரித்துக் கொண்டது. கெய்ரோ புதுயுக அரபி இசையின் வடிவமாக மாறியது. உம் குல்தும் (எகிப்திய இசைக்கலைஞர்) ஃபரூஸ் (லெபனான் இசைக்கலைஞர்) முதலில் மதம் சாராத இசை வடிவத்தை முன்னெடுத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1950 மற்றும் 60களில் அரபிய இசை, மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், அரபிய பாப் இசை உருவானது. மேற்கத்திய இசைவடிவமும் அரபிய இசையை உள்வாங்கியதுடன், அரபிய வாத்தியக் கருவிகளான ஓளட் மற்றும் தெர்புக்கி இசைக்கருவிகளுக்கு மாற்றாக லெக்டிரிக் கிடாரையும், டிரம்ஸையும் உள்வாங்கி இசையை உருவாக்கியது.

‘ஹபிபி’உலகம் முழுவதும் புகழ்பெற்றது அனைவரும் அறிந்ததே. மேலும் சூஃபி பாடல்களும் இசை வடிவங்களும் இறைவனின் நெருக்கத்தையும், அவனுடனான உறவையும் உள்ளடக்கியவைகளாக இருந்தன. எலக்ட்ரானிக் நடன இசை வடிவம் ஆஸ்திரேலியாவில் பிறந்த ரிச்சி என்ற இசைக்கலைஞரால் வெகுஜன பாராட்டுதலுக்கு உள்ளாகியதுடன், தற்போதும் இரவு களியாட்ட விடுதிகளில் பாடப்படும் இசைவடிவமாகப் புகழடைந்துள்ளது. இது மேற்கத்திய இசைக்கருவிகளுடன் அரபிய இசைக்கருவிகளின் சேர்ந்திசையாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக ஆப்பிரிக்க தொடக்கத்தில் உருவான ஜாஸ் மிகவும் புகழ்பெற்ற இசைவடிவமாக இன்றளவில் உருவெடுத்துள்ளது. அரபிய இசை, ராக் இசை நுட்பங்களையும் சுவீகரித்துக்கொண்டது. ராக் இசை எலக்ட்ரிக் கிடாரை மையப்படுத்தி உருவாகி 1940களில் இருந்து அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் துள்ளலுடன் கூடிய இசை வடிவம்.

அரபிய இசை வடிவம் மக்ஃம் இசை வடிவம் எனப்படுகிறது. மக்ஃம் என்பது மென்மையான இசை வடிவம். மக்ஃம் அளவீடுகள் என்பது சின்னச் சின்ன உறுப்புகளால் ஆன ஒரு தொடர் குறிப்புகளைக் கொண்ட இசைக் குறிப்பேடு. சின்ன உறுப்புகள் ஜின்ஸ் என அழைக்கப்படுகிறது. இதன் பன்மை வடிவம் அஜ்னாஸ் எனப்படுகிறது.

ஜின்ஸ் என்பது தொடர்ந்த மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து குறிப்பேடுகளைக் கொண்டது. மேலும் பிளெமென்கொ என்பது தெற்கு ஸ்பெயின் பகுதியினைச் சார்ந்த மூர் நாகரிக நாடோடிகளின் வேகமான மற்றும் இசைவான கைகளைத் தட்டியும், கால்களால் நிலத்தில் தட்டியும் இசைக்கப்படுகின்ற இசை வடிவம். போசா என்பது பிரேசிலின் சம்பா நடனத்தை ஒத்த நடன இசைவடிவம். ஃபாரா சிராஜ், பிளெமென்கோ, ஜாஸ், போசா மற்றும் பாப் இசை வடிவங்களின் கூட்டிசையாக நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், மனிதநேயத்தை வலியுறுத்தியும் அமைதிக்காகவும், எல்லா மக்களுக்கான விடுதலைக்கும் சேர்ந்ததாக தாள இசை வடிவத்தைக் கையாள்கிறார்.

புத்தத் துறவியான அனிசோயிங், புத்தமத இசைவடிவமாக, புத்த மந்திரங்களை பல்வேறு தாள லயங்களுடன் பயன்படுத்துகிறார். மந்திரங்களின் வகைகள் அமைதி, அன்பு, ஆனந்தம் என பல்வேறு உணர்வு நிலைகளைக் குறிப்பிடுவதாக உள்ளன. ’நாகி கோம்பா’ இளம்பெண் துறவிகளுக்கான மடத்தை நிர்வகிப்பதுடன், புத்த மந்திர இசைவடிவத்தை உலகெங்கும் கொண்டு சென்றதில் முக்கியமானவர் அனிசோயிங்.

இப்படியரு கூட்டிணைவைச் சாத்தியப் படுத்தியிருக்கும் ரகுமான் இசையமைப்பாளர் என்பதையும் கடந்து, ஆழ்ந்த அகத்தேடல் கொண்ட மனிதராகவும் நம் முன் நிற்கிறார். அலசல்களும் புரிதல்களும் எவ்வாறு இருப்பினும், ஜாரியாவின் அனுபவம் தியான நிலையில் நம்மைச் சில கணங்களாவது ஆழ்த்துவது யதார்த்தம்.

பிற படைப்புகள்

Leave a Comment